Friday, December 20, 2013

Kill Bill - பழிவாங்கும் கலை

அது ஜப்பானில் உள்ள ஒரு விடுதி.

  "ஓ-ரென்-ஸ்சி ஏன் ஒளிஞ்சிருக்க ? வெளிய வா!"  எனும் காட்டு கத்தலை கேட்டு ஓ-ரென்-ஸ்சி என்ற பெண்மனி தனது படை பரிவாரத்துடன் வெளியே வந்து பார்க்கிறாள். எதிரே மரணபீதியுடன் நிற்கும் ஒரு பெண்னின்(செம ஃபிகரு)  கை வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுகையில் அவளின் பின்னால் இருந்து ஒரு உருவம் கையில் ரத்தம் சொட்டும் கத்தியுடன் வெளிப்படுகிறது. படு துள்ளலான ராப் இசை பின்னனியில் ஒலிக்க கொலைவெறியுடன் நடந்துவரும் அந்த உருவம் ஒரு பெண். அவள் பெயர் பிரைட். அவளை கண்டு மொத்த கூட்டமும் ஓட்டமெடுக்க அதன்பின்னர் ஓ-ரென்-ஸ்சிகும் பிரைடிற்கும் பெரும் யுத்தம் துவங்குகிறது.

இப்படிப்பட்ட ஒரு காட்சி கில்பில் என்ற படத்தின் முதற்பாகத்தில் கடைசி இருபது நிமிடங்களுக்கு முன் வரும். இதைப்போன்ற மிக அட்டகாசமான ஒரு கெத்தான  சீனை நான் ரஜினி படத்தில்கூட பார்த்ததில்லை. முதலில் இந்த படத்தோட இயக்குனர் க்வன்டின் டரன்டினோவை பற்றி பார்த்து விடுவோம் இல்லனா வண்டி வண்டியா திட்டுவாரு.

1990களில் ஹாலிவுட்டை கைப்பற்றி இன்றுவரை தனது வித்யாசமான திரைப்படங்களால் ஆட்சி செய்பவர். தனது இரண்டாவது படமான பல்ப் ஃபிக்சனிற்காக ஆஸ்கர் வாங்கியவர். வாய்நிரைய கெட்டவார்த்தை திரை நிரைய ரத்தம் இவை இரண்டும் இல்லாமல் க்வன்டின் படமே எடுக்கமாட்டார். திரையில் இருவர் பேசிக்கொண்டால் அது எவ்வளவு கடினமான பெரிய வசனமாக இருந்தாலும் பேசுபவரை விட்டுவிட்டு கேட்பவரைத்தான் திரையில் காட்டுவார். அதுவும் வசனம் எழுதுவதில் இவர் ஒரு கில்லாடி. பெரும்பாலும் காட்சிக்கும் பேச்சிற்கும் சம்பந்தம் இல்லாமலும் டார்க் ஹியூமரிலும் வசனம் இருக்கும்.

ஒரு சிறிய உதாரணம் இந்த  கில்பில்-ன் ஆரம்ப காட்சி.
கதாநாயகி பிரைட் மரணஅடி வாங்கி உயிருக்கு போராடும் நிலையில் ஒரு கை அவள் முகத்தில் உள்ள ரத்தத்தை பரிவுடன் கர்சிஃப்பால் துடைத்துக்கொண்டே மிகவும் அன்பாக அவளுடன் பேசும்.
அந்த உருவம் நமக்கு காண்பிக்கப்படுவதில்லை. ஆனால் அடுத்த நொடி பிரைட் அந்த கையால் கொல்லப்படுவாள் இந்த காட்சியில் உள்ள முரணை கவணித்தால் க்வன்டினின் மேதமை தெரியும். அவளை கொல்ல வந்த கை எதற்காக அவளது முகத்தை துடைத்துவிட வேண்டும்?.
எல்லா இயக்குனர்களும் அரைத்த மாவையே அரைத்தாலும் அதே மாவை க்வன்டினிடம் கொடுக்கும்போது அதில் சாதா தோசைக்கு பதில் சுவையான மசால்தோசை சுடுவதுதான் க்வன்டின் டரன்டினோவின் திரைக்கதை திறமை. இனி படத்தின் கதை ( அப்ப இன்னும் முடியலையா...)

ஒரு ஊர்ல (எல்லா கதையும் இப்படிதான ஆரம்பிக்கும்) டெட்லி வைபர் அஸஸின் ஸ்குவாட் என்ற கொலைகார கும்பல் ஒன்று உண்டு. இதன் தலைவன் பெயர் பில். அதில் கைதேர்ந்த கொலைகாரிதான் பிரைட். அவள் மனம் திருந்தி வாழ தனது கூட்டத்தைவிட்டு விலகி செல்கிறாள். இது பிடிக்காத பில்லும் அவன் கும்பலும் பிரைடை போட்டுத்தள்ள, சாவிலிருந்து மீண்டு வந்து எப்படி பழிவாங்குரானு தொரிஞ்சிக விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் படத்தை பாருங்கள். பழிவாங்குதலை ஒரு கலையைப்போல் எடுத்திருப்பார். முதலில் ஒரே பாகமாக வரவேண்டியது நான்கு மணி நேரத்திற்கு மேல் ஓடக்கூடியதால் இரு பாகமாக வெளியிட்டனர்.

இது சம்பவங்கள் முன்னும் பின்னும் மாறி மாறி காட்டப்படும் நான்லீனியர் திரைப்படம்.
இருந்தாலும் இரு பாகமும் தெளிவாக புரியும். க்வன்டினோட டிரேட்மார்க்கே திரைப்படத்தை ஒரு நாவலைப்போல் அத்யாயமாக பிரித்து அதற்கும் தலைப்பு வைத்து எடுப்பதுதான். க்வன்டின் ஒரு பழைய ராப் இசை ரசிகர் அதனால்தான் இவரது எல்லா படங்களிலும் பின்னனியில் ராப் பாடல்களை ஒலிக்கச்செய்வார் அது இந்த படத்திலும் பட்டையை கிளப்பியிருக்கும்.
இந்த படத்தின் நாயகி உமா த்ருமேன் நல்ல அழகிதான் இருந்தாலும் இந்த படம் முழுவதும் இவரது ஆக்ரோசமான அடிதடிதான். ரத்தத்தை பார்த்தால் மயக்கம் போடும் கேசுகளுக்கான படம் இதுவல்ல.

Saturday, December 7, 2013

The Hobbit:Desolation of smug ஒரு முன்னோட்டம்

டிசம்பர்மாத குளிருடன் கிருஸ்துமஸ் வருதோ இல்லையோ பீட்டர் ஜாக்ஸனின் படம் வெளிவந்து என்னையும் என் கண்ணையும் எப்போதும் குளிரூட்டத்தவறுவதே இல்லை. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே பதினோரு மாதங்கள் நான் காத்திருந்தது இதோ இழுத்துப்பேர்த்திக்கொண்டு இப்படி டைப்பன்னி மொக்கை போட்டு உங்களை கொல்வதற்காக மட்டுமல்ல, ஒரு அருமையான திரைப்படத்திற்காகவும்தான். வரும் 13ம் தேதி வெளிவரவிருக்கும் பீட்டர் ஜாக்ஸனின் த ஹாபிட் : டிஸோலேசன் ஆஃப் ஸ்மிக் தான் அது.
அப்படி அந்த படத்துல என்னதான்யா இருக்கு? லார்ட் ஆஃப் த ரிங்ஸ் மற்றும் ஹாபிட் படங்களின் மைய கதையே சுவாரஸ்யமான அட்வெஞ்சர் பயணம்தான். அதனூடே பல்வேறு சித்திர விசித்திர மனிதர்கள், விலங்குகள், தேவதைகள், நாடுகள் ராஜியங்கள், ராஜா ராணிகள்(இதில் ஒருமை பன்மையை கவணிக்கவும்), மந்திர தந்திர வித்தைகள் என பல சுவைகளை கலந்த பஞ்சாமிர்த கதையாய் எழுதியதுதான் ஜே.ஆர்.ஆர். டோல்கினின் திறமையே. ஒரு நாவலை எப்படி திரைப்படமாக எடுக்கவேண்டும் என எடுத்துக்காட்டி உதாரணமாக்கியவர் இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன்.
இந்த ஹாபிட்டின் முதல் பாகத்தை நான் சேலம் சங்கீத் தியேடரில் பார்த்துவிட்டு அந்த கற்பனை உலகைவிட்டு வெளிவர மனமில்லாமல் தியேடரைவிட்டு கடைசி நபராக வெளிவந்ததும், அடுத்த வாரமே மீண்டும் காணவந்து படம் தூக்கப்பட்டு நொந்து சென்றதும் பிஹைன்ட் த ஸ்க்ரீன்.  இதுவரை வந்த அணைத்து படங்களும் 24fps அதாவது ஒரு நொடிக்கு 24 ஃபிரேம்கள் என்ற விகிதத்தில் எடுக்கப்பட்டவை. ஆனால் இந்த ஹாபிட் சீரிஸ் மட்டும் முதன்முறையாக 48fps என்ற விகிதத்தில் எடுக்கப்பட்டவை. இதனால் காட்ச்சிகளில் தெளிவும் கிராஃபிக்ஸில் துல்லியமும் அதிகரிக்கும். இந்த படத்தை அதன் ஒரிஜினல் 48fps ல் ஐமேக்ஸ் திரையரங்கில் 3D ல் பார்த்தால் ஒரு திரைப்படம் கொடுக்கக்கூடிய உச்சபட்ச்ச சந்தோசத்தை அடைவீர்கள். சென்னையில் கூட 48fpsல் ஓடும் திரையரங்குகள் உண்டு. எப்படியிருந்தாலும் என்னால் இம்முறை பார்க்கமுடியாது எனவே எனது 2014 புது வருட தீர்மானமே இதன் மூன்றாம்பாகமான The Hobbit :There and back again படத்தை அடுத்த டிசம்பரில் ஐமேக்ஸ் 3Dல் பார்ப்பதுதான்.
ஜாக்ஸனின் இயக்கத்தில் 2016ல் வெளிவர இருக்கும் The Adventures of Tintin:
Prisoners of the Sun படமும் இப்போதே என் எதிர்பார்ப்பில் வந்துவிட்டது

Saturday, October 5, 2013

District 9

ஏலியன்னா யாருங்க.  விசித்திரமான விலங்குகளோ கொடூரமான இயந்திரங்களோ அல்லது இவை இரண்டும் கலந்து, மனிதனை கொல்ல கொலைவெறியுடன் அலையும் ஒரு படுபயங்கர ஜந்து (சிலருக்கு அவங்க மணைவியோ காதலியோ ஞாபகத்திற்கு வரலாம்). இப்படித்தான் காலங்காலமாக ஏலியன் படங்கள் சித்தரித்தன. இதிலிருந்து மாறுபட்டு ஏலியன்களை பலவீனமாக பூமிக்கு வந்த அகதிகளாக காட்டிய ஒரு வித்தியாசமான திரைப்படம்தான் District 9.
ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை சன்டிவியில் 'சுறா'படம் பார்த்துக்கொண்டிருக்கும் ஏகாந்தமான சூழலில் உங்கள் ஊருக்கு மேல் ஒரு ஏலியன் விண்கலம் வந்து நின்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் தென்னாப்ரிக்காவின் ஜோகனஸ் பர்க் நகரின் மேல் ஒரு ஏலியன் வின்கலம் வந்து பழுதடைந்து அப்படியே நின்றுவிட்டது. இது ஏதோ மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு வந்த மருமகன் போல் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் அங்கேயே தங்கி விட்டது. அதிலிருந்த வினோதமான ஏலியன்கள் இறங்கிவந்து ஜோகனஸ்பர்கிலேயே தங்கி பல்கி பெருகிவிட்டது. இந்த ஏலியன்களுக்கும் மனிதர்களுக்குமிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டதால் அரசாங்கமே ஒரு பெரிய மதிர்சுவற்றிற்குள் பல குடிசைகளை கட்டி அதில் ஏலியன்களை தங்க வைத்திருந்தது. அந்த இடத்தின் பெயர் தான் டிஸ்ட்ரிக்ட் 9.
தொன்னாப்ரிக்க அரசு MNU (miltinational united) என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் ஏலியன்களை பராமரிக்கிறது. இந்த mnu-ன் பார்ட்டைம் வேலை ஏலியன் தொழில்நுட்பத்தில் ஆயுதங்கள் செய்வது, ஏலியன்களின் மேல் பல்வேறு பரிசோதனைகள் செய்வது. இந்த MNU-ல் வேலை செய்பவர்தான் கதாநாயகன் வைகஸ். இந்த நகரத்திலிருந்து ஏலியன்களை வெகு தொலைவிற்கு இடமாற்றுவது தொடர்பாக டிஸ்ட்ரிக்ட் 9ற்குள் செல்கிறார். ஒரு ஏலியனின் வீட்டிற்குள் சேதனை செய்கையில் அங்கே மரைத்துவைக்கப்பட்ட ஒரு சிறிய குப்பி இவருக்கு கிடைக்கிறது.
அதை தவறுதலாக திறந்ததால் அதிலிருந்த திரவம் வைகஸ் முகத்தில் படுகிறது.  அந்த குப்பியை mnu அலுவகத்திற்கு எடுத்துச்செல்கிறார். இதிலிருந்துதான் பிரச்சனையே அந்த திரவத்தால் வைகஸும் மெல்ல ஏலியனாக மாறத்தொடங்குகிறார். இங்க ஒரு கிளைகதையை சொல்கிறேன் (ஓடாதீங்க) இந்த ஏலியன் குரூப்பில் ஒரு சைன்டிஸ்ட் ஏலியனும் அவருக்கு ஒரு மகனும் நண்பனும் உண்டு. மேலே இருக்கும் விண்கலத்திற்குச்செல்ல இந்த மூவரணி ஒரு சிறிய கலத்தை கட்டுகின்றனர். இதனை இயக்க தேவையான எரிபொருளை 20 ஆண்டுகால உழைப்பில் உருவாக்கி ஒரு குப்பில் அடைக்கின்றனர்.  இப்ப அந்த குப்பி இருப்பது mnu அலுவகத்தில்.
இந்நிலையில் ஏலியனாக மாறிக்கொண்டிருக்கும் வைகஸை mnu துரத்துகிறது வேறுவழியில்லாமல் வைகஸ் ஏலியனிடமே அடைகலமாகிறார்.  அந்த குப்பியை எடுத்து ஏலியன்கள் விண்கலத்திற்கு சென்றார்களா? வைகஸ் மீண்டும் மனிதனாக மாறினாரா என்பதை படத்தில் பாருங்கள். இந்த படத்தை பார்க்கையில் ஏதோ ஒரு டாக்குமெண்டிரி விடியோவை பார்ப்பதைபோலவே உணர்விர்கள் அப்படித்தான் எடுத்திருப்பார்கள். அதனால்தான் இதன் உண்மை தன்மையும் அதிகரிக்கிறது. ஆனா இதை ஏதோ ஆர்ட்ஃபிளிம்னு மட்டும் நினனச்சிடாதீங்க பட்டாசை பற்றவைத்தால் எப்படி இருக்குமோ அப்படி படபடவென இருக்கும் இதன் திரைக்கதை. இந்த டிஸ்ட்ரிக்ட் 9க்குள் இருக்கும் ஒரு லோக்கல் ரௌடி கும்பலுக்கும் ஹீரோவுக்கும் இடையே நடக்கும் ஆக்ஸன் காட்சிகள் படு அட்டகாசமா எடுக்கப்பட்டிருக்கும்.அப்படி எடுத்த இயக்குனரான நெய்ல் ப்லோகாம்பிற்கு இதுதான் முதல் முழுநீல திரைப்படம். இதற்கு முன்னர் 2005ல் இவர் எடுத்த Alive in joburg என்ற குறும்படத்தின் விரிவாக்கம்தான் இந்த திரைப்படம். இதை தயாரித்தவர் இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன். இவரது வீட்டா நிறுவனம்தான் இந்த படத்தின் தத்ரூபமான ஸீஜிக்கு காரணம்.( இந்த வீட்டாதான் ஷங்கரின் ஐ படத்துக்கும் ஸிஜி). 37மில்லியன் டாலரில் எடுத்து உலகம்முழுவதும் 210 மில்லியன் வசூலித்து ஹாலிவுட்டையே ஆட்டம் காணவைத்த ஒரு தென்னாப்ரிக்க திரைப்படம் இது. இந்தப்படத்தை பார்த்ததும் உங்களுக்கு நிச்சயம் தோன்றும் ஒன்று, மனிதர்களை விட ஏலியன்கள் தேவலாம் என்று.

Wednesday, October 2, 2013

Indiana Jones-ஓர் அறிமுகம்

ஜூன் 12, 1981ல் அந்த திரைப்படம் வெளியானது. அவர் ஒரு சாதாரண ஹீரோதான் ஆனால் எந்த ஒரு சூப்பர் ஹீரோவுக்கும் சற்றும் குறையாத சிறப்பை அவர் அடையப்போவதை அப்போது யாரும் உணரவில்லை அதன் இயக்குனரான ஸ்பீல்பெர்கும் கூட. அந்த திரைப்படம் Raiders of the Last Ark. இத்தனைக்கும் இந்த கதாபாத்திரத்தை உருவாக்கியவர் ஸ்டார் வார்ஸ் படங்களை இயக்கி புகழ்பெற்றவரான ஜார்ஜ் லூகாஸ்.ஆரம்பத்தில் இக்கதாபாத்திரதிற்கு லூகாஸ் வைத்த பெயர் இண்டியானா ஸ்மித், இது ஸ்பீல்பெர்கிற்கு பிடிக்காததால் பின்னர் மாற்றப்பட்டதே இந்த இண்டியானா ஜோன்ஸ்.
சரி யாருயா இந்தாளுனா ஒரு ஆர்க்கியாலஜி புரபசர். பல்வேறு இனங்களின் நாகரிக வளர்ச்சி பற்றி ஆழ்ந்த ஞானம் உள்ளவர்.இரண்டாம் உலகப்போர் சமயத்தில் CIA-ன் Office of Strategic Services என்ற பிரிவில் பார்ட்டைமாக உளவாளியாகவும் இருப்பவர். கவ்பாய் தொப்பியும் லெதர் ஜாக்கெட்டுடனும் சாட்டையை சுழற்றியபடி இவர் செய்யும் சாகசங்களே இவரின் பிரதான அடையாளம். இவரின் எல்லா கதைகளுமே எனக்கு மிகப்பிடித்தமான ஜானரான புதையல் தேடும் கதைதான். பில்டப் போதும் இனி படத்தைப்பற்றி .

கிருஸ்துவத்தில் உள்ள பத்து கட்டளைகளுள் சொல்லப்பட்ட சக்திவாய்ந்த ஒரு ஒளியை(Ark) பற்றிய கதையே டாக்டர் ஜோன்ஸின் முதல் படமான ரைடர்ஸ் ஆப் த லாஸ்ட் ஆர்க். இந்த ஆர்க்கை தங்களுக்கு சாதகமாக்கி இரண்டாம் உலகயுத்ததில் வெல்ல நினைக்கும் நாஜிக்களை எப்படி ஜோன்ஸ் முறியடிக்கிறார் என்பதை படத்தில் பாருங்கள்.
இவரது பெரும்பாலான கதைகள் 1930களின் மத்தியில் ஹிட்லர் பின்னனியில் நடப்பவை. இதிலிருந்து மாறுபட்டு இந்தியாவை பின்புலமாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் Indiana jones and the Temple of Doom (1984). விலைமதிப்பற்ற ஒரு மரகதக்கல்லை தேடி இந்தியாவிற்கு வரும் ஜோன்ஸ், ஒரு பயங்கர சாமியாரால் நரபலியிடப்படும் சிறுவர்களை காப்பதே இப்படத்தின் கதை. இந்த படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் "தளபதி" புகழ் அம்ப்ரிஷ் பூரி.
மீண்டும் ஹிட்லர் பின்னனியில் இந்த சீரிசில் மூன்றாவதாக வந்த திரைப்படம் Indiana jones and the Last Crusade (1989). ஏசுவின் கடைசி விருந்தில் பயன் படுத்தப்பட்ட Holy Grail எனும் ஒரு ஓயின் கின்னத்தை தேடிச்சென்று தொலைந்துபோன தனது தந்தையை தேடிச்செல்லும் ஜோன்ஸின் பயணம்தான் இந்தப்படம். இதில் இவரின் தந்தையாக நடித்திருப்பவர் சீன் கானரி. ஹிட்லரிடம் ஜோன்ஸ் ஆட்டோகிராஃப் வாங்கும்படியான ஒரு ரசமான காட்சியும் இதில் உண்டு. அது எப்படினு படத்தில் பாருங்கள்.
இதன் பின்னர் இக்கதைகளை மறந்துவிட்டு ஏலியன் மற்றும் ரோபோக்களின் பக்கம் சென்றுவிட்டார் ஸ்பீல்பெர்க். கிட்டத்தட்ட பத்தொன்பது வருடங்கள் கழித்து தன் மகனின் ஆசைக்கினங்க மீண்டும் இண்டியானா ஜோன்ஸ் கதையை புதையலைப்போல தோண்டியெடுத்தார். அதுவே 2008ல் வெளியான Indiana jones and the Kingdom of the Crystal skull. இது 1940ல் ரஷ்யாவின் ஸ்டாலினை பின்னனியாக கொண்ட கதை. ஏலியன் சக்தியை பெற நினைக்கும் ஸ்டாலின் ஆட்களை தடுக்கும் முயற்சியின் நடுவே மாயன் நாகரீகம்,  தொலைந்துபோன தங்கநகரமான எல் டொரடோ ( இதைபற்றி பல கதைகள் வந்துள்ளன), ஏலியன்கள் என பல சுவாரஸ்யங்களை தொட்டுச்செல்கிறது.
இந்த படங்கள் எல்லாமே ஒரேமாதிரியான டெம்பிளேட்டை கொண்டிருந்தாலும் ஒரு நிமிடம்கூட அலுக்காமல் உங்களை படம்பார்க்க வைப்பது இதன் ஜெட்வேக திரைக்கதைதான்.  இண்டியானா ஜோன்ஸ் கதாபாத்திரத்திலேயே நடித்து ஒரு கிளாஸிக் ஐகானாக மாறியவர் நடிகர் ஹாரிசன் ஃபோர்ட். இது போன்ற படங்களை எடுப்பதில் ஸ்பீல்பெர்க் ஒரு ஜித்தர். மொத்தத்தில் இந்த படங்களை பார்ப்பது, காந்தி ஜொயந்தி அன்று சரக்கை தேடியலையும் அட்வெஞ்சரை போன்று ஒரு ஜாலியான அனுபவம் கிடைக்கும்.

Saturday, August 3, 2013

The Lone Ranger

படம்வந்து இவ்ளோநாள் கழித்து விமர்சனம் எழுதும் கடைசி நபர் நானாகத்தான் இருப்பேன் ஏன்னா இந்த தியேடரில் படம்பார்ப்பவர்கள் தயவுசெய்து கத்தாதீங்க விசில்அடிக்காதீங்க அங்கையும் இங்கையும் நடக்காதீங்க. என்னைப்போல் தியேடர் பிரிண்டில் படம்பார்ப்பவர்களின் நிலமைய நினைத்துபாருங்க.
wild west படங்களின் பிதாமகரான செர்ஜியோ லியோனின் படங்கள் சீரியஸாசாக இருந்தாலும் மெலிதான நகைச்சுவை அதனுடே இருக்கும். அதேவரிசையில் வந்திருக்கும் இந்த லோன் ரேஞ்சர், சீரியஸையே சிரிக்கும்படி சொல்லியிருக்கும் படம். பைரேட்ஸ் ஆப் த கரீபியன் படத்தை எடுத்த அதே டீம்தான் இந்த படத்தையும் எடுத்துள்ளனர் என்ற எதிர்பார்ப்புடன் சென்றால் ஏமாற்றம் நிச்சயம். சரி இப்ப படத்தை பார்ப்போம்.
1933, சான்ஃபிரான்ஸிஸ்கோவில் நடைபெரும் ஒரு வைல்டு வெஸ்ட் கண்காட்சியை காணவரும் ஒரு சிறுவனிடம் தன் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார் அந்த செவ்விந்தியர். அவர் பெயர் டான்டு (ஜானிடெப்). 1869ல் டெக்ஸாஸ் மாகாணத்தில் ரயில்பாதை அமைத்துக்கொண்டுள்ளார் ஒரு அரசாங்க உயரதிகாரி. அதே நகரின் பிரபல ரேஞ்சர் டான் ரெய்ட். இவருக்கு ஜான்ரெய்ட் என்ற தம்பியும் ஒரே ஒரு மனைவியும் ஒரு மகனும் உண்டு. இவரின் மனைவிமீது அந்த உயரதிகாரிக்கு ஒரு கண்ணு, அவளுக்கு ஜான்ரெய்ட்மேல ஒரு கண்ணு, ஆனா உங்களுக்கு அவமேல ரெண்டு கண்ணு. இந்நிலையில் ஒரு சுபயோக சுபதினத்தில் பிரபல கொள்ளைகாரணான புட்ச் கேவன்டிசை பிடிக்க டான்ரெய்ட் அவர் தம்பியுடன் கிளம்புறார். ஆனா அவங்க எல்லாரையும் கொன்னுட்டு கொள்ளையன் தப்பிடுறான். இங்கதான் ஒரு டிவிஸ்ட் செவ்விந்தியரான டான்டு ஜான்ரெய்ட காப்பாற்றி அவருக்கு முகமுடி மாட்டிவிட்டு லோன் ரேஞ்சரா மாற்றுகிறார்.  பின்னர் இவ்விருவரும் , செவ்விந்தியர்களை கொன்று அவர்களின் வெள்ளி சுரங்கத்தை வைத்து நாட்டையே பிடிக்கும் உயரதிகாரியின் திட்டத்தை எப்படி முறியடிக்கிறாங்கனுபடத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
ஜானிடெப்பை பொருத்தவரை pocல் எப்படியோ அதேபோல் இதிலும் உள்ளார். pocன் அனைத்து பாகங்களிலும் எனக்கு மிகவும் பிடித்தது ஜானிடெப்பின் அறிமுக காட்சிதான் அதைப்போல் இந்த படத்தில் இவருக்கு அறிமுக காட்சி இல்லாவிட்டாலும் அதற்கு இணையான படு அட்டகாசமான ஒரு காட்சி இறுதியில் வரும் டிரெய்ன் சேசிங்கில் உள்ளது.
மொத்தத்தில் உங்களுக்கு போரடிக்குறப்ப பாருங்க ஜாலியா இருக்கும்.

Thursday, July 18, 2013

வாலி

இவர்
புவியில் பாடினார்
எவன் எவனுக்கோ
இன்று
கவிபாடச்சென்றுவிட்டார்
எமனுக்கோ!

இவர்பாட்டால்
ஒருவர் மந்திரியானார்
ஒருவர் மன்மதன்ஆனார்
முன்னவர் MGR
பின்னவர் STR
இவர்

கிருஷ்ணவிஜயம் எழுதினால்
கிருஷ்ணரேகூட
எட்டிப்பார்ப்பார்
தன்னையும் விஜயம் செய்யென
சிவனும் இவரிடம்
முட்டிப்பார்ப்பார்

இவர் பக்திப்பாடலால்
காமனுக்கும்
அருள்வரும்
இவர் காதல்பாடலால்
கந்தனுக்கும்
காதல்வரும்

அகவை என்பதிலும்
இவர்
இளமை நீரூற்று
எந்த காலத்திற்கும்
பாட்டெழுதுவதில்
நீர் ஊற்று

அண்ணார் உதித்ததோ
திருவரங்கம்
வெள்ளுடை வெண்தாடியில்
சினிமாவில் வாழ்ந்த
கவிச்சுரங்கம்

பாமாலையால் பூமாலை
கட்டியவருக்கு இன்று
மரணம் வைத்தது
மலர்வளையம்
உன்னுடன் உடன்கட்டை ஏரலாமா
என்ற யேசனையில்
தாழ்ந்திருக்கிறது
தமிழ்மகளின் தலையும்.
 ்

Monday, July 15, 2013

நூலகம்-2

நாவல்களைப்போல் பெருத்தும் சிறுகதைகள் போல் சிறுத்தும் இல்லாமல் இவை இரண்டிற்குமிடையில் கட்டுரை வடிவில் சுவைபட கதைசொல்வதில் கைதேர்ந்த எழுத்தாளர் கார்டூனிஸ்ட் மதன்.இவரின் வந்தார்கள் வென்றார்கள் அணைவரும் அறிந்ததே, அதனால் இவரின் மற்ற நூல்களைபற்றி எழுதலாம் என நினைக்கிறேன்.

மனிதனும் மர்மங்களும்

அந்த பிரபல மனோதத்துவ மருத்துவர் தனது வழக்கமான நோயாளியை காண அந்த மருத்துவமணை வராண்டாவில் நடந்து கொண்டிருந்தார். எதிரில் வந்த ஒரு நர்ஸ் அவருக்கு வணக்கம் வைத்துவிட்டு மறைந்துவிட்டார்(?!). இத்தனை வருடங்களில் அந்த நர்ஸை பார்த்திராத மருத்துவர் அவரைபற்றி விசாரித்தார். பல வருடங்களுக்கு முன்பே அந்த நர்ஸ் மருத்துவமனையில் தூக்கில் தொங்கிய உண்மை அப்போதுதான் அவருக்கு தெரியவந்தது. அப்புடினா அவர் பார்த்த அந்த அது? அதுவேதான்!
இதுபோன்ற பேய்கதைகளை சற்று பயந்துகொண்டே படிப்பது எனக்கு பிடித்தவிசயங்களில் ஒன்று. இதைப்போலவே பல 'பிரபல' பேய்கதைகள் இந்த புக்கில் உண்டு.

மனிதன் மல்லாக்க படுத்து வானத்தை பார்க்க ஆரம்பித்த அன்றுமுதல் இன்றுவரை தொடரும் ஒரு தொடர்கதை ஏலியன்.  ஹாலிவுட்டில் பொழப்பு ஓடுவதே இந்த பயபுள்ளைகளாலதான். பறக்கும் தட்டு முதல் பட்டர்ஃபிளை வரை வானத்தில் பார்த்தவர்கள் அனேகம்பேர் அமெரிக்காவில் இன்றும் உள்ளனர். ஏலியனை பேட்டி எடுத்தவர் ஏலியனுடன் சம்பந்தம் பேசியவர்னு இந்த புக்ல நிரையபேர் இருக்காங்க ஜாக்கிரதை.

ஒரு பொருளை கண்ணால்பார்த்தே நகர்த்தவோ வலைக்கவோ பறக்கவோ வைக்க முடியுமா? அப்படியும் ஒருவர் இருந்தார். அவர் பெயர் யூரி கெல்லர். இவரை பல மருத்துவர்கள் சோதனைசெய்து பார்த்ததில் அசந்துபோன ஒரு விசயம் இவர் தனது உயரத்தை கூட்டியும் குறைத்தும் காண்பித்ததுதான். இந்த வகையராக்களும் இதில் உண்டு.

என்னதான் மனிதன்  கிளிஜோசியத்திலிருந்து கம்ப்யூட்டர் ஜோசியத்திற்கு பரிணாமவளர்ச்சி அடைந்திருந்தாலும் இவை அணைத்தும் எதிர்காலத்தை தெரிந்துகொள்ளும் ஆசையையே காட்டுகிறது. பலநூரு ஆண்டுகள் கழித்து நடக்கப்போவதை முன்னரே எழுதிவைத்த மனிதர்களும் தன் மரணத்தை முன்பே தெரிந்துகொண்ட ஆப்ரஹாம் லிங்கனும் மற்றொறு அதிசய சிறுமியும் இந்நூலில் வருகின்றனர். முடிந்தால் அவர்களிடம் உங்கள் எதிர்காலத்தை கேட்டுபாருங்க. மொத்தத்தில் இதுஒரு ரகளையான கலவையான புக்

Friday, July 5, 2013

முன்னோட்டம் - Trailer

கடந்த சில நாட்களில் இந்த ஹாலிவுட்காரர்கள் அயன்மேன் மற்றும் சூப்பர்மேனை வைத்து உங்கள் பணத்தையும் மனத்தையும் பதம்பார்த்து விட்டனர். இது போதாதென்று தலைவரின் லோன் ரேஞ்சர் வேறு. இவற்றிற்கெல்லாம் மாற்று மருந்தாய் அமைந்தது நம்ம சிங்கம்-2 என்பது தனிக்கதை. இதோடு பொலச்சிபோங்கடா என்று விட்டார்களா என்றால் அதுதான் இல்லை. அடுத்த ஆறு மாதங்களிலும் 2014லிலும் வெளிவந்து வசூலை வாரிகுவிக்கவோ வாய்பிளக்க வைக்கவோ அல்லது வசைமாரி பொழியவோ வைக்க இருக்கும் ஹாலிவுட் படங்களை பற்றிய டிரைலர் பதிவுதான் இது.

1.Thor:The dark world
ஏற்கனவே இவர் தனியாகவும் Avangerல் கூட்டாகவும் வந்து பூமியை கதிகலங்கச்செய்தவர். நோர்ஸ் கடவுளின் மகனும் இடியின் அதிபதியான இந்த தோர் இம்முறை பூமியையும் அவர் கிரகத்தையும் எப்படி காக்கிறார் என்பதை சுத்தியல் முழங்க கண்டுமகிழுங்கள். இந்த பகுதியிலும் பங்காளி லோகி உண்டு.

2.300:Raise of an Empire
300 படத்தின் வெற்றிக்கு பிறகு கிரேக்கநாட்டிற்கு என்ன ஆனது என்பதை நாம் மறந்துவிட்டோம் ஆனால் ஹாலிவுட்டில் மறப்பார்களா?. ஸ்பார்டா மன்னர் லியனோடசும் 300 வீரர்களும் இறந்தபின் , பெர்ஸிய மன்னர் ஸெர்ஸிஸ்கும் கிரேக்க தளபதி தெமிஸ்டோக்ளஸ்கும் நடக்கும் யுத்தமே இத்திரைப்படம். வரலாற்றில் மிக நெருக்கமாக நடந்த ஒரு போரை அதே நெருக்கத்துடன் உங்களமீதே ரத்தம் தெரிக்கும் அளவுக்கு 300ல் காட்டியவர்கள் இதில் கிரேக்க கடற்போரை கடல்நீர் தெரிக்கும் அளவுக்கு அருமையாய் எடுத்துள்ளனர்.இப்படமும் ஃபிராங்க் மில்லரின் கிராபிக் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

3.Riddick:Rule the Dark
2000 மற்றும் 2004ல் வந்த ரிட்டிக் சீரிசில் இது மூன்றாம் பகுதி. இந்த பிரபஞ்சம் முழுதும் உள்ள பல கிரகங்களால் தேடப்படும் ஒரு கெரகம்புடிச்ச பயபுள்ளதான் இந்த ரிட்டிக். Bounty hunterகளால் பிடித்துவரப்பட்டு பல ஏலியன்கள் இருக்கும் கிரகத்தில் விடப்படும் ரிட்டிக் அங்கிருந்து எப்படி தப்பித்து எதிரிகளுக்கு ரிவிட் அடிக்கிறான் என்பதுதான் கதை. கிராஃபிக்ஸ் கலக்கலாக உள்ளது.

4.The Wolverine
தொடந்து X-manல் நடித்து அங்கிருந்து ரிடயர்ராகி வால்வரைனாக வந்தவர் இப்போது மீண்டும் வந்துள்ளார். டோக்கியோவிற்கு அமைதியாக "வாளை"சுருட்டிக்கொண்டு வாழப்போகிரார் வால்வரைன். அங்க ஒரு பக்கி சும்மா இல்லாம அண்ணாத்த கத்தியில சொனையிருக்கானு சொறிஞ்சிபார்க்க வால்வரைன் வகுந்தெடுக்கும் கதையை படத்தில் பாருங்க.

5.The Hobbit:The Desolation of Smaug
ட்வர்ப் எனப்படும் குள்ள மனிதர்களுக்கு உதவச்செல்லும் மற்றொறு சித்திரகுள்ளரான பில்போ பேகின்ஸ் எனும் ஹாபிட்டின் அட்வெஞ்சர்தான் இந்த இரண்டாம் பாகம். வழக்கம்போல் கர்மசிரத்தையுடன் பீட்டர் ஜாக்சன் எடுத்துள்ளார். இந்த பாகத்தில் புதிதாக வருபவர் நமக்கு LOTRல்  ஏற்கனவே பரிச்சயமான எல்ப் இனத்தைசேர்ந்த லெகோலஸ். வில்வித்தையில் நமது அர்ஜுனனை இவரைப்போல்தான் காட்டவேண்டும். எனக்கு மிகவும் பிடித்த இப்படம் வரும் டிசம்பரில் ரிலீஸ்.
6.Machete kills
ராபர்ட் ரோட்ரிகஸ் என்ற இயக்குனரை உங்களுக்கு தெரிந்திருந்தால் பிடித்திருந்தால் இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். இவர் Spykids, Once upon a time in mexsico படங்களின் இயக்குனர். ஜெசிகா ஆல்பா, அலெக்ஸா வேகா உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட அழகிகளை வைத்துக்கொண்டு வெரும் ஆக்ஸன் படமா எடுத்திருக்கமாட்டார் என நினைக்கிறேன். ஏனெனில் முந்தைய Machete படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும். அப்புறம் இந்த படத்தில் மெல் கிப்சன்தான் வில்லன்.

இவை அனைத்தும் யுடியூபில் வெளியான டிரைலரை வைத்து எழுதப்பட்டது.  இவற்றைதவிர வரவிருக்கும் மேலும் சில திரைப்படங்கள
1.Captian America:winter solder
2.Pacific Rim
3.Red 2
4.The Amezing Spiderman 2
5.CinCity 2
6.Juracik park 4
7.Avengers 2

........Wait n see......
        

Sunday, June 23, 2013

நூலகம்

நாவல்களை நான் படிக்கத்தொடங்கிய காலத்தில் இந்திரா சவுந்தர்ராஜன்,ராஜேஷ்குமார் போன்றோரின் நாவல்களை படித்து முடிப்பதே எனக்கு பேரரசின் படங்களை முழுவதும் பார்ப்பதை போன்று கடினமாக இருந்தது. இந்நிலையில்தான் கல்கியின் பொன்னியின் செல்வனை படித்தேன் முடித்தேன். அன்றுமுதல் இந்நாவலை வருடத்திற்கு ஒருமுறை படிப்பதை வைபவமாய் வைத்திருக்கிறேன். சற்றே கிண்டலான  சுவாரஸ்யமான அவரது எழுத்துநடையும் விருவிருப்பான கதையோட்டமுமே அவ்வளவு பெரிய நாவலை படிக்கமுடிந்தது. அதன்பின்னர் இந்த வரலாற்று வழியில் படையெடுத்தவர் அனேகம்பேர், அதில் வெற்றிபெற்றவர் வெகுசிலரே. சுஜாதாகூட இதில் தோல்விதான். இதில் பிரபலமான சாண்டில்யனின் கடல்புறாகூட விஜய்காக எழுதப்பட்ட ஒரு திரைக்கதையை போலவே எனக்கு தோன்றுகிறது. ஆழ்வார்கடியானைப்போல் இந்த அனபாயச்சோழன் ஏனோ மனதில் ஒட்ட மறுக்கிறார். சரி அதைவிடுங்க நான் சொல்லவந்தது கவிஞர் மு.மேத்தா எழுதிய ஒரு அருமையான வரலாற்று நாவலைப்பற்றி.  1982ல் விகடன் பொன்விழா சரித்திர நாவல் போட்டியில் முதற்பரிசு வென்ற " சோழநிலா " தான் அந்நாவல்.

கதை நடக்கும் காலத்தில் வீரபாண்டியனுக்கும் குலசேகரபாண்டியனுக்குமிடையே மதுரையின் சிம்மாசனத்திற்கு ஒரு இசைநாற்காலி போட்டியே நடக்கிறது. இவர்களுக்கு ஆதரவாக இலங்காபுரி தண்டநாயகர்கள் இருவர் வந்து தமிழகத்தையே அதகளம் செய்கின்றனர். கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக்கொண்ட சோழநாட்டில் டம்மி ராஜாவின் ஆட்சியை கலைக்க பல்வேறு சதிகளும் நடக்கிறது. இத்தகைய ஒரு சூழலில் ஈடுஇணையற்ற ராஜதந்திரமும் வீரமும் கொண்ட சோழநாட்டு தளபதி திருச்சிற்றம்பலமுடையான் பெருமான் நம்பி பல்லவராயர் ( எவ்ளோ சின்ன பேரு), எப்படி இந்த சதிகளையேல்லாம் முறியடித்து குழோத்துங்க சோழனை அரசனாக்கினார் என்பதே இந்நாவலின் கதை. ஒரு சரித்திர நாவலை எப்படி சஸ்பென்சா எழுதமுடியும்னு இந்த நாவலை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

மு.மேத்தாவின் மற்றொறு அருமையான சரித்திர நாவல் "மகுடநிலா". இது பிற்கால சோழர்களின் பிரமாண்ட ஆட்சிக்கு முதன்முதலில் வித்திட்ட விஜயாலய சோழனும் அவன் மகன் ஆதித்தசோழனையும் பற்றியது.
இவ்விரு நாவல்களும் கவிதா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். ஆனால் தற்போது கிடைப்பது சந்தேகம்தான் மறுபதிப்பே இல்லையென நினைக்கிறேன். எட்டு வருடங்களுக்கு முன் நான் நூலகத்தில் படித்தபோது இப்பவோ அப்பவோ என உயிரைவிடும் நிலையில் இருந்தது. கதைமட்டும் இன்றும் உயிருடன் இருக்கிறது என்னுள்.